தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தேனி மாவட்டம் போடி அருகே சீலையம்பட்டி, கோட்டூர், முத்துதேவன்பட்டடி, பழனிச்செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/92995e83-97a5-404d-b386-d66ccf36c0ad/IMG_20240402_WA0044.jpg)
அப்போது பேசிய ஐ.லியோனி, “நம் வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் முதலில் இலையில் போட்டியிட்டார். இலையை ஆடு மேய்ந்து விட்டது. பிறகு குக்கரில் போட்டியிட்டார். குக்கர் வேகாத குக்கராகிவிட்டது. அதனால் தாய் கழகத்திற்கு வந்துவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் எப்படிபட்டவர்கள் என்பது அவருக்கு தெரியும். அதன்மூலமாக தங்க தமிழ்ச்செல்வன் மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், பாஜக-வுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு எப்படி நன்மை செய்வார். தற்போது ஒற்றை விரலாக நிற்கிறார். ஐந்து விரல்களாக இருந்தவர்களை இழந்தவர் வெறுங்கையில் முழம் போடும் ஆளாக சுற்றித் திரிகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/dbc59098-e325-44e8-ad01-46fc22d12646/IMG_20240402_WA0045.jpg)
எடப்பாடி பழனிசாமி மோடியை ஆதரித்து பேச வேண்டும். இல்லையெனில் எதிர்த்து பேச வேண்டும். மோடி பிரதமராக வரக்கூடாது என அவர் கூறவில்லை. இங்கு போடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது ராமநாதபுரத்தில் பலாபழம் விற்று வருகிறார். இன்னும் 3 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி கொய்யாபழம் விற்க சென்றுவிடுவார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/794c6541-ec09-47fe-9e6a-93e893d5509b/IMG_20240402_WA0046.jpg)
பெரியகுளம் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தொகுதிக்கு என்ன செய்தார். ஆர்.கே நகரில் வெற்றி பெற்றார் அதற்கு பிறகு தொகுதி மக்கள் தொகுதி பக்கமே வரவில்லை. கடந்து 10 ஆண்டுகளில் 6, 7 முறை மட்டுமே தமிழகம் வந்த பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7, 8 முறை வந்துள்ளார். தோல்வி பயம் காரணமாகவே தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகிறார்.” என்றார்,