புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்து வருகிறார். 21.12.2023 அன்று அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி, `அரசு செயலர்களும், அதிகாரிகளும் சரியாக ஒத்துழைப்பதில்லை’ என்று ஆளுநர் தமிழிசை முன்பே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “அரசு விழாவில் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இப்படி பேசுவது இது முதன்முறை அல்ல.
பல முறை அதிகாரிகளின் செயல்பாடுகளை இதேபோல அரசு விழாக்களில் கூறி வருகிறார். அதற்கு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலாளருடன் பேசி தீர்க்க வேண்டும் என பதிலளித்துள்ளார் கவர்னர் தமிழிசை. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்புகள், திட்டங்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தனது கூட்டணிக் கட்சிகளை பலமிழக்கச் செய்து, அவப்பெயரை உருவாக்கி, ஆதாயம் தேடும் செயலை செய்கிறது பா.ஜ.க. அதேபோல புதுவையிலும் தனது கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேநிலை தமிழகத்தில் உருவானபோது, பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது.