புதுடெல்லி: கட்டாயப்படுத்தி மவுனமாக்கும் கலாச்சாரமும், மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “டாக்டர் பாபாசகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுக்காக, அவரின் இந்த 132 வது பிறந்தநாளில் இந்திய தேசிய காங்கிரஸ் அவருக்கு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகிவைகளின் வெற்றியாளராக பாபாசாகேப் இருந்தார். இந்தியாவின் அரசியலைப்பு சிற்பி என்று நாம் அனைவரும் அவருக்கு மரியாதை தருகின்றோம். பல வலுவான அமைப்புகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார். மேலும், சாதி பாகுபாடு, பாலின சமத்துவமின்மை, பிரித்தாளும் அரசியல் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்பட்டவர் அம்பேத்கர்.

அந்நாளைய முன்னணி பொருளாதார அறிஞராக, இந்திய ரிசர்வ் வங்கி கருத்தாக்கத்தை உருவாக்கியதன் மூலம் வங்கித்துறைக்கு பெரும் பங்காற்றியவர். மேலும் இந்தியாவின் விவசாயம், அதன் நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு அம்பேத்கர் பங்களிப்பு செய்துள்ளார். நவீன இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பாபாசாகேப் அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பின் அடித்தளம் இன்று ஆபத்தில் உள்ளது. விவாதம் நடத்தும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் ஆளுங்கட்சியால் இன்று போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 1949ம் ஆண்டு நவம்பரில் நடந்த அரசியலமைப்பு சபையில் பேசிய அம்பேத்கர், ”அரசியலமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் அதன் இயல்பினால் மட்டும் இயங்கமுடியாது. அரசியலமைப்பானது, சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை போன்ற அரசின் அங்கங்களை உருவாக்க முடியும். ஆனால், அவற்றின் செயல்பாடுகள் மக்களையும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் சார்ந்தே இருக்கும். அவர்கள் தங்களின் விருப்பங்கள் மற்றும் அரசியலுக்கு ஏற்ப தங்களின் அமைப்புகளை உருவாக்கிக் கொள்வார்கள். இந்தியாவின் மக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்று யார் கூற முடியும்?” என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள், குடிமைச்சமூகம், சமூக செயல்பாட்டாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவைகளை கட்டயமாக மவுனத்திற்கு உள்ளாக்கும் கலாச்சாரமும், மக்களை தேச விரோதிகள் என முத்திரை குத்தும் போக்கும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை அழித்துவிடும். இந்திய அரசியல் சூழலில் தனி நபர் துதிபாடுவது எத்தகைய தீமையை ஏற்படுத்தும் என்பது குறித்து அம்பேத்கர் முன்பே எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவில், தனிநபர் துதிபாடுதல் என்பது உலகின் எந்த அரசியல் கலாச்சாரத்திலும் இல்லாத அளவிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. மதத்தின் அடிப்படையில் பக்தி ரட்சிப்பிற்கு வழிவகுக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி மற்றும் தனிநபர் வழிபாடு என்பது சீரழிவிற்கும், சர்வாதிகாரத்திற்கும் உறுதியான பாதையாக மாறிவிடும்.

நாம் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உயர்ந்த லட்சியங்களை பாதுகாக்கப்போகிறோமா அல்லது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கப்போகிறோமா என்று தீர்மானிக்கும் நேரம் இது. தேர்வு செய்யும் உரிமை நம்மிடமே உள்ளது, நம்மிடம் மட்டுமே உள்ளது.” இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி என்ற அம்பேத்கரின் சர்வதேச விழுமியங்கள் நமக்கான ஒளிவிளக்காக இருந்து வழிகாட்டி வலிமைபடுத்தும். இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு அவரது பிறந்த நாளில் எனது அஞ்சலிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *