புளியங்குடி பரமானந்தா பள்ளி செயலாளர் ஞானப்பிரகாசம் இது குறித்து பேசியபோது, ’’50 ஆண்டுகள், 100 ஆண்டுகளைத் தாண்டிய அரசு உதவிபெறும் பள்ளிகள் நிறைய உள்ளன. அரசுப் பள்ளிகள் ஆரம்பிக்காத காலத்திலே இந்தப் பள்ளிகள்தான் கிராமங்கள் வரை கல்விப்பணியைச் செய்தன. இதில் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள்தான் படிக்கின்றனர்.
இவர்களுக்கும் எல்லா அரசு சலுகைகளும் கிடைத்து வந்தது. இப்போது வந்துள்ள சில திட்டங்கள் இவர்களுக்குக் கிடையாது என்பது இந்தப் பள்ளி மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு சென்று சேருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படும்.
மாணவர்களின் நலனில் மிகுந்த கவனமெடுத்து கற்பித்து வரும் நிலையில், எங்களைப் போன்ற பள்ளிகளுக்கு இந்த சலுகைகள் கிடையாது என்பது பின்னடைவாகவே இருக்கும். அரசின் நலத்திட்டங்கள், அரசு நிதி உதவி பெறும் மாணவ, மாணவியருக்கு இல்லாமல் போனது சமூகநீதிக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும்.
அரசு நிதி உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளான கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு…
1. உயர் கல்வி பயில 7.5% இட ஒதுக்கீடு
2. உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000
3. மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி
4. மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் உரிமை
இவையெல்லாம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கிடையாது என்று சொல்வது தமிழக அரசால் தற்போது இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியாகும்’’ என்றார்.