ஜோகன்னஸ்பெர்க் :
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை தென்னாப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக அந்நாட்டின் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
தென்னாப்பிரிகாவின் மிக உயர்ந்த நீதித்துறையாக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியரான நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.
64 வயதான நரேந்திரன் ஜோடி கோலப்பன் மற்றும் ராம்மகா ஸ்டீவன் மாதப்போ ஆகியோர் அரசியலமைப்பு ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறையில் நீண்ட நெடும் அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும்
ஜனவரி 1-ந்தேதியன்று பொறுப்பேற்க உள்ளனர்.
1982ம் ஆண்டு நீதித்துறையில் பணியாற்றி வரும் இவர் பொதுப்பணியில் ஈடுபாடு கொண்டவர். அவர் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பில் 1993ம் ஆண்டு இணைந்தார். பின் அந்த அமைப்பின் இயக்குநராக உயர்ந்தார்.
1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளராக பொறுப்பேற்றார்.பின்னர், 2016ம் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்க சட்ட சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.அவர் மனித உரிமைகளுக்கான அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
ஐ.நா. சபை மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து உரையாற்றி உள்ளார்.
அவருக்கு டர்பன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. வணிகம் மற்றும் பொருளாதார காங்கிரஸ் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
அவருடைய தாயார் 1956ம் ஆண்டு பாரபட்சமான சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதன் காரணமாக 2 முறை சிறைத்தண்டனையை அனுபவித்தவர்.அப்போது அவர் கோலப்பனை கருவில் சுமந்து கொண்டிருந்தார் என்று தன் தாயை பற்றிய நினைவுகளை அடிக்கடி கோலப்பன் பகிர்ந்து கொள்வார்.
2010ம் ஆண்டு அரசியலமைப்பு கோர்ட்டு நீதிபதியாக அவர் இருந்த போது ‘கலாச்சார மற்றும் தேசிய அடையாளம்’ பற்றி தெரிவித்த வலுவான அறிக்கை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.