🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*சமூகப்பற்றாளன் ஞானசித்தனின்*
*தினமொரு பயனுள்ள தகவல்*
நாள் : 30 – 10 – 21
-
🇮🇳சமீபத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படமானது என்னை வெகுவாக கவர்ந்தது..
அதற்கு காரணம்….
நீதிமன்றத்தில் வழக்காடும் போது ஒரு அருமையான வசனம் வரும்..
நான் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன்
ஆனால் என்வீட்டில்
அண்ணல் அம்பேத்கார் படம் மற்றும் அய்யா முத்துராமலிங்கம் அவர்களின் படமும் உள்ளது.!!!
நான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக முத்துராமலிங்கம் அய்யாவின் போட்டோவை வைத்து வணங்கக்கூடாதா?
அல்லது அண்ணல் அம்பேத்கார் அவர்களை பிற சமூகத்தினர் தலைவராக ஏற்க கூடாதா???
மேற்காணும் வசனமானது சமூக மேன்மைக்காக பாடுபட்ட தேசிய தலைவர்களை, சுதந்திர போராட்ட தியாகிகளை, பொதுமக்களின் உரிமைக்காக தன்னலமற்று செயல்பட்ட தலைவர்களை ஜாதி முத்திரை குத்தி அவர்களை மாற்று சமூகத்தினர் பிறர் ஏற்காதவாறு மோசமான சூழ்நிலையை இன்றைய தலைமுறையில் உருவாக்குகிறார்கள்??? என்ற கண்ணோட்டமே ஆகும்..
🪔வடக்கில் ஜோதிராய் பூலே அவர்களும், தெற்கில் தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளால்
இன்று அனைத்து ஜாதியினரும் அர்சகர் ஆகலாம் என்கிற நிலையானது உருவாகியுள்ளது.!!!
🪔 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”
என்று நமது பாட்டி
ஒளவையார் அவர்கள்
ஜாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள்
பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ
அல்லது பாலின (ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ
குறிப்பிடவில்லை!
மாறாக இடக்கூடிய தகுதியுடையோர்
(அவர்கள் பிறப்பால்
எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்) பெரியோர்களே.
அவ்வாறு
இடாதார்(அவர்கள் எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்)
அவர்கள் இழிகுலத்தோர்களே என்று எடுத்துரைக்கிறார்.
🪔சாதிகள்
இல்லையடி பாப்பா
குலத்
தாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவம்
என்கிறார் மகாகவி பாரதியார்..
🪔அளவுக்கு மீறிய ஜாதி மத பற்று என்பது மனிதனை மனிதனாக்காமல் மனிதனை மிருகமாக்குகிறது, காட்டுமிராண்டியாக்குகிறது.
🪔 அக்டோபர் – 30 – ம் தேதியான இன்று பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யாவின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளாகும்..
🪔 *இன்றைய பயனுள்ள தகவலாக பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு*
🪔உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கம் அய்யா ஆவார். அவரைத் தவிர யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை இனிமேல் பிறக்கவும் முடியாது.
🪔 இந்துவின் வயிற்றிலே
பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை
தளபதியாய் விளங்கியவர்.
🪔 விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர்.
🪔 திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.
🪔 வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கியவர்.
🪔 “பசும்பொன்” என்ற சொல்லுக்கு இரண்டு
பொருள் உண்டு.
ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தெய்வதிருமகனாரையே குறிக்கும்.
🪔 திருமகனார் அவர்கள்
தமிழகம் உயர தமிழ் வளர.. தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
🪔 *பிறப்பு*
முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் எனும் சிற்றூரில் அக்டோபர் 30 ம் தேதி 1908 ஆம் ஆண்டு பிறந்தார்..
பெற்றோர்
தந்தையார் உக்கிரபாண்டி
தாயார் இந்திராணி அம்மையார் ஆகியோர் ஆவர்.
🪔 *இளமைக்காலம் மற்றும் அரசியல் ஈடுபாடு*
இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து துவக்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
🪔 *மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆலயப் பிரவேசம்*
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிஜனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதன் அவர்கள் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு.
இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதன், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்.
ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள்.
அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்”. “அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன்.
வைத்தியநாதன் அவர்கள் அரிஜனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தனது கருத்தை பரப்பினார், அவரது அறிக்கை மதுரை மற்றும் தென்மாவட்டம் முழுவதும் வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
08.07.1939 -ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிஜன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிஜன சமூகத்தினரும் வைத்தியநாதன் அய்யாவுடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.
இப்படி வரலாறு வாழ்த்தும் படியான சம்பவத்தை முன்னின்று நடத்தியவர்தான் முத்துராமலிங்கம் அய்யா ஆவார்.!!!
🪔 *இறப்பு*
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29 – ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி, பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
🪔 *அவர் கூறிய பொன்மொழிகள்*
தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்.
சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை.
சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும்.
சாதியும், நிறமும் அரசியலுக்குமில்லை ஆன்மீகத்துக்குமில்லை.
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்.
வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்.
தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.
உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.
அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
🪔 *தனித்திறமை*
அய்யா அவர்கள்
மிகச் சிறந்த பேச்சாளர்
தனது வாழ்நாள் முழுவதும் மேடைதோறும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார்.
குறைந்தது மூன்று –
நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு, வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.
ஆன்மீகத்தில் அவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன.
மேலும் இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். இவரது சொற்பொழிவுகளில், தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.
🪔 *குருபூஜை*
அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 என்பது வியப்பான விந்தையான செய்தியாகும்.
எனவே அவரது பிறந்தநாள் ஜெயந்தியும் குருபூஜையும்
ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் அவரை தெய்வமாக வணங்குகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு அவரை வணங்குகின்றனர்.
குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென் மாவட்டங்களான தேனி,
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும், குருபூஜை நாளன்று, கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
1995-ம் ஆண்டு மத்திய அரசு, அவரை கௌரவிக்கும் வகையில், அஞ்சல் தலை வெளியிட்டது.
🪔 *தங்க கவசம்*
தமிழக முன்னாள் முதல்வர்
ஜெ. ஜெயலலிதா அவர்கள் 2010 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், “முத்துராமலிங்கம் அய்யாவின் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும்” என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.
*~~~~((())))~~~~*
🇮🇳 அய்யன் திருவள்ளுவர் அவர்கள்
*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்*
என்றார்..
அதாவது
பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்கிறார்…
இன்றைய காலக்கட்டத்தில் பரம்பரை பரம்பரையாக செய்த தொழிலை யாரும் தொன்று தொட்டு செய்வதில்லை..
அனைத்து சமூகத்தினரும் அனைத்து தொழில்களை செய்து வருகின்றனர்.!!!
சமூகப்பற்றாளன் ஞானசித்தனாகிய எனது பார்வையில் இன்றைய காலத்தில் ஜாதி என்பது தேவையில்லாத ஆணிதான்.!!!
*சாதியெனும் மலத்தை நாடும் ஈயாக அல்லாமல்*
*சமத்துவமெனும் மலரை நாடும் தேனீயாக நாம் இருப்போம்*
# நன்றி
# வணக்கம்
✍️
முனைவர்
*சமூகப்பற்றாளன் ஞானசித்தன்*
7598534851
வெள்ளக்கல்பட்டி,
நாமகிரிப்பேட்டை,
நாமக்கல் மாவட்டம்.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔