நாமக்கல் நகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஆஞ்சநேயர் கோயில். இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் திருமேனியோடு அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்துசெல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறப்புவாய்ந்த, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு, அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதன்காரணமாக, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர், பட்டாச்சார்யர்கள் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். பால், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் ஆகியன கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் மட்டும் இன்றி, அருகில் உள்ள கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற இருப்பதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.