பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமான ஷகீப் அல் ஹசன், ‘Betwinner News’ என்ற சூதாட்ட நிறுவனத்துடன் பிராண்ட் அம்பாஸிடர், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
“இந்தச் செய்தி உண்மையா அல்லது போலியான செய்தியா என்பது குறித்து ஷகீப் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை. இருப்பினும் இது போன்ற விஷயங்களை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இதன் உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB).
மேலும், இந்த விவகாரம் குறித்து ஹசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இது உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது பற்றிக் கூறிய BCB-இன் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சௌத்ரி, “ஷகீப் தனது ஒப்பந்தம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. சமீபத்தில்தான் நாங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம். இது ஒரு சூதாட்டத் தளத்துடன் செய்து கொண்ட நேரடி ஒப்பந்தம் அல்ல. ஆனால் இந்த விஷயம் சூதாட்டத் தளத்துடன் தொடர்புடையது என்பதால் இது விசாரிக்கப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டின் சட்டம் சூதாட்டத்தை அனுமதிக்காது, எனவே இதை சட்டப்பூர்வமாக விசாரித்து இதற்கு விரைவாகத் தீர்வு காண விரும்புகிறோம்” என்றார்.
இதற்கு முன்னதாக ஷகீப் அல் ஹசன், 2018-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது ஊழல் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிடத் தவறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் 2019-ம் ஆண்டில் ஐசிசியின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறியதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட ஷகீப், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒரு வருடம் தடை செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷகீப் அல் ஹசன் மீதான எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.