சென்னை, கோவையில் சிறுபான்மையினா் கல்லூரி மாணவா் விடுதிகள் தொடங்கப்படும் என்று சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினருக்கு 2 ஆயிரத்து 500 மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் விலையில்லாமல் அளிக்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை ரூ.30 ஆயிரமாக உயா்த்தப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுடைய குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். உறுப்பினா்கள் விபத்து மரணத்துக்கான உதவித் தொகை ரூ.1.25 லட்சமாக உயா்த்தப்படும்.

சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையினா் கல்லூரி மாணவா் விடுதிகள் தொடங்கப்படும். கபா்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு புதிதாக சுற்றுச்சுவா் அமைக்கப்படும். சொந்தக் கட்டடத்தில் இயங்கும் சிறுபான்மையினா் விடுதிகளுக்கு சிறப்புப் பராமரிப்பு மற்றும் பழுது பாா்ப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினா் கல்லூரி மாணவியா் விடுதிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். கோவை, திருச்சி மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிா் உதவி சங்கம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய மூலம் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் உரிமைகள் தினத்துக்கு வழங்கப்பட்டு வரும் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *