பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவது, அரசுக்கே திருப்பியனுப்புவது, தெலங்கானாவில் கடந்த ஆண்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை இல்லாமலேயே பட்ஜெட் கட்டத்தொடர் தொடங்கியது, பஞ்சாப்பில் மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற நிகழ்வுகளைக் கூறலாம்.

இதில், தமிழ்நாடு அரசும் பஞ்சாப் அரசும் ஆளுநருக்கெதிராக தாக்கல்செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. உச்ச நீதிமன்றமும் ஆளுநர்கள் தலையில் கொட்டு வைக்கும் விதமாக, ஆளுநர் பதவியின் அதிகாரம் குறித்த கருத்துகளைக் கூறிவருகிறது. இந்த நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் அலுவலகத்துக்கு எந்த காலக்கெடுவும் விதிக்கக் கூடாது என அம்பேத்கரே பரிந்துரைத்ததாகவும், அவ்வாறு காலக்கெடு இருந்தால் ஆளுநர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.