மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடக்குவட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி, சேலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கருவூலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்பிலான 12,500 வேஷ்டிகள் திருடப்பட்டன.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 4 பேரை ஏற்கெனவே கைது செய்த போலீஸார், வேஷ்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான நில அளவையாளர் சரவணனை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த சரவணனை (48) தனிப்படை போலீஸார் நேற்றுகைது செய்தனர். அவரது 3 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.