
புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் முதலைக் குட்டியை காண மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி காமராஜ் சாலையில் உப்பனாறு வாய்க்காலில் முதலைக் குட்டி தென்பட்டது. இதனைப் பாலத்தையொட்டியுள்ள கடையில் பணியாற்றிய ஊழியர் ஏழுமலை முதலில் பார்த்துள்ளார். அவர் தனது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து புகைப்படம் எடுத்தார். அதற்குள் அங்கு கூடிய மக்கள் 3 அடி நீளமுள்ள முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர். அதற்குள் முதலை புகைப்படம் வைரலானது.
தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது ஏற்பட்ட வாகன இரைச்சலால் சற்றுநேரத்தில் முதலை தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனது. முதலையைப் பிடிக்க வாய்க்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடினார்கள். அதற்குள் மக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
தகவல் அறிந்து தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் அங்கு வந்து வனத்துறை அதிகாரிகளை தொடர்புக்கொண்டு முதலையை விரைந்து பிடிக்க வலியுறுத்தினார். இதனிடையே அங்கு வந்த வனத்துறை பாதுகாவலர் வஞ்சுலவள்ளி, ஊழியர்களிடம் ஆற்றின் ஆழத்தை கணக்கிட கூறினார். 5 அடி ஆழம் இருந்ததால் நீரோட்டத்தை நிறுத்தி விட்டு முதலையைப் பிடிக்கலாம் எனக் கூறினார்.
புதுச்சேரியில் முதல்முறையாக முதலை தென்பட்டுள்ளது. முதலில் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. பொது மக்கள் முதலையைப் பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் வனத்துறைக்கு தெரிவிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…