திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை அம்மன் உற்சவத்துடன், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வ வழிபாடு நிறைவு பெற்றதும், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் நேற்று முன்தினம் (17-ம் தேதி) கொடியேற்றப் பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்தி களின் 10 நாள் உற்சவம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தனர்.

இதையடுத்து, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பரா சக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெள்ளி விமானங்களில் தனித் தனியே எழுந்தருளி நேற்றிரவு மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது, அவர்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

இன்றைய உற்சவம்: 3-ம் நாள் உற்சவமான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் பூத வாகனத்தில் சந்திர சேகரர் ஆகியோர் எழுந்தருளி மாட வீதியில் வலம் வரவுள்ளனர். மேலும், சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் இன்றிரவு மாட வீதியில் வலம் வந்து அருள் பாலிக்கவுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: