
அரசுப் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவரின் இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், மாணவா்கள் சிலா் ஆபத்தான முறையில், அரசுப் பேருந்து படியில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்தனா்.
குன்றத்தூா் தேரடி பகுதியை கடந்தபோது பேருந்தின் முன் படிக்கெட்டில் பயணித்த சந்தோஷ் என்ற மாணவா் தவறி விழுந்தாா். அப்போது, பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், மாணவரின் இரு கால்களும் நசுங்கின.
மிகவும் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவரின் உயிரை காப்பாற்றும் வகையில், இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவா்கள் கூறியதாவது:
மாணவரின் இரு பாதங்களும் மிக மோசமான நிலையில் நசுங்கியிருந்தன. இதனால், அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை வாயிலாக, இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளன. தற்போது, மாணவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூட்டுப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…