நாட்டில் ரோடுகள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு தேசிய நெஞ்சாலை , மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் உள்ளன. பெரு நகரங்களை இணைக்கும் வகையிலான நான்கு வழிச்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும், அதற்கடுத்த நிலையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ரோடுகள் மாநில நெடுஞ்சாலைத்துறையாலும் பராமரிக்கப்படுகின்றன.
இவ்விரு துறைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத ரோடுகள் அந்தந்த பகுதி சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் பராமரிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக கோடிக்கணக்கான பணம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு ரோடுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் ரோடு அமைந்த பின்னர் அதற்கு நிர்ணியிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை பராமரிப்பு பணி நடப்பதில்லை.குறிப்பாக தாருக்கும், நீருக்கும் பொருந்தா குணம் இருப்பதால் ரோட்டில் தொடர்ந்து சில நாட்கள் நீர் தேங்கி நின்றாலே ரோடு சிதைந்துவிடுகிறது. இவ்வாறு ரோட்டில் தேங்கும் நீரை மண்வெட்டியை பயன்படுத்தி ரோட்டோர மண் பகுதிக்குள் கடத்திவிட்டால் தான் ரோடு பாதிப்படைவதை தடுக்கப்படும்.
ஆனால் இதுபோன்ற பராமரிப்பு பணி ஏதும் நடக்காததால் பல ரோடுகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலே கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு அதிக சிரமத்தை தருபவையாக மாறி விடுகின்றன. குறிப்பாக கிராமப்பகுதியில் இருக்கும் ரோடுகளில் இந்த அவல நிலை அதிகம் உள்ளது.
ரோடு அமைப்பதுடன் பணி முடிந்தது என்றில்லாமல் மழை நீர் தேங்காமல் பராமரித்தால் தான் ரோடுகளில் ஆயுள் காலம் அதிகரிக்கும். மக்களுக்கும் சுலபமான போக்குவரத்து வசதி இருக்கும். மக்களின் வரிப்பணமும் வீணாவது தவிர்க்கப்படும். மாவட்ட நிர்வாகம் ரோட்டில் நீர் தேங்காமல் பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
