வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன.
குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.