விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் பயணித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சிரமத்தை களைய, வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் ராஜபாளையத்தில் தொடங்கப்பட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி மதுரை – தென்காசி தேசிய நெடுச்சாலையில், வாடகை கட்டடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தனர். தொடர்ந்து, ஓட்டுநர் உரிமம் வழங்கக்கோரிய பெண்ணுக்கு திறப்பு விழா மேடையில் வைத்தே அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உரிமம் வழங்கினர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, “தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை இலவச பேருந்துகளில் 375 கோடி ரூபாய்க்கு பயணங்கள் நடைபெற்றுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் இலவச பேருந்தை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசும்போது, “கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை முறையாக கவனிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்ததால், தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது. இருப்பினும், தமிழக முதல்வர் கூடுதல் கவனமெடுத்து தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க அதிக பேருந்துகள் இயக்கினார். அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை மீட்டெடுத்து வருகிறார்’ என பேசினார்.
முன்னதாக, முடங்கியாறு சாலையில் உள்ள பொன்விழா மைதானம் எதிரே ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் அடிக்கல் நாட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.