
திமுகவின் இருசக்கர வாகனப்பேரணிக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில், பாமகவின் இரு சக்கர வாகன பேரணிக்கும் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சாா்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்துக்கு இரு சக்கர வாகன பேரணி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஓா் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன் என்பதுதான் விநா எழுகிறது.
தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக். 5-ஆம் நாள் தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணிகளை நடத்தும்படி பாமகவினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 வாகனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன். ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பாமகவின் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை இப்போது திமுகவுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது எந்தவகையில் நியாயம்?
தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாமகவின் இரு சக்கர வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…