`Wagh Bakri Tea” குழுமத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான பராக் தேசாய் (49), கடந்த மாதம் தெருநாய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவின் பல மாநிலங்களில் தெருநாய்த் தாக்குதல் என்பது மிகத் தீவிரப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சமீபகாலமாக தெருநாய்கள் தாக்குதலில் சிறுவர்கள் அதிக அளவில் சிக்குவது அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், பராக் தேசாய் மரணத்தைத் தொடர்ந்து, பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில், தெருநாய்களால் மக்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்பாக 193 மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரித்த நீதிமன்றம், “தெருநாய்கள், கால்நடைகள் போன்ற விலங்குகளால் தாக்கப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு, மாநில அரசு முதன்மையாகப் பொறுப்பேற்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள், தங்களின் நாய்கள் உள்ளிட்ட பிராணிகள் பிறரைக் கடித்துவிட்டால், ஒரு பல் குறிக்குக் குறைந்தபட்சம் ரூ.10,000-மும், கடித்ததால் ஏற்படும் 0.2 செ.மீ காயத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.20,000-மும் வழங்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு, இது தொடர்பான தீர்வுகளுக்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.