பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் கந்த சஷ்டி திருவிழாநாளை நண்பகல் 12 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
அன்று சாயரட்சை பூஜை, பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். மாலை 3.15 மணிக்கு அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசுவாமி வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சந்நிதி அடைக்கப்படும்.
திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும்,தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும்.
இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவைத் தொடர்ந்து, சுவாமி மலைக் கோயிலுக்கு செல்வார். அங்கு பூஜைநடைபெறும். விழா நிறைவாகவரும் 19-ம் தேதி காலை மலைக் கோயிலில் வள்ளி-தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம், மாலைபெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி-தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.