உலகக்கோப்பையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும் அரையிறுதிப் போட்டி வருகிற நவம்பர் 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் இந்தியா எப்போதும் பதற்றத்துடன் அணுகும் ஒரு அணி நியூசிலாந்துதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராஸ் டெய்லர் எழுதியிருப்பதாவது, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த அரையிறுதிக்கு இந்திய அணி வலுவாக வந்து நின்றது. ஆனால், நாங்களோ நெட் ரன்ரேட்டுக்காகப் போராடி அந்த இடத்திற்கு வந்திருந்தோம். நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது இந்திய அணி இன்னும் வலுவாக அரையிறுதிக்கு வந்திருக்கிறது. ஆனால், இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் தறுவாயில் நியூசிலாந்து ஓர் அபாயகரமான அணியே. இந்திய அணியைப் பதற்றமடைய செய்யும் வல்லமை உடையது நியூசிலாந்து மட்டுமே. போட்டி நடக்கும் மும்பையின் சூழலைப் புரிந்து கொண்டு தகவமைத்து ஆடுவது நியூசிலாந்துக்குச் சவாலாக இருக்கும். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே முதல் 10 ஓவர்கள் ரொம்பவே முக்கியம்.
நியூசிலாந்து முதலில் பந்துவீசினால் அந்த 10 ஓவர்களுக்குள் ஒரு 2 – 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட வேண்டும். இந்திய அணி ரோஹித், கில், விராட் கோலி என டாப் ஆர்டரைத்தான் அதிகம் நம்பியிருக்கிறது. இவர்களைச் சீக்கிரம் வீழ்த்தினால் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்த முடியும்.

அதேமாதிரி பேட்டிங்கின் போது பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோரை பாதுகாப்பாக எதிர்கொள்ளும் அதேவேளையில் ரன்களையும் சேர்க்க வேண்டும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் எதிரணியை மொத்தமாக வீழ்த்திவிடுவார்கள். ஸ்பின்னர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ரச்சின் ரவீந்திராவுக்கு இது ஒரு சிறப்பான போட்டியாக இருக்கும். ராகுல் டிராவிட், சச்சின் இருவரின் பெயரையும் வைத்துக் கொண்டு மும்பையில் இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் ஆடுவது மறக்கமுடியாத தருணமாக இருக்கும். அரையிறுதிப் போட்டியில் மட்டுமல்ல, நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்திலுமே ரச்சின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்.
எப்போதுமே நம் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும். புதன்கிழமை நடக்கும் அரையிறுதியில் அதிர்ஷ்டம் நியூசிலாந்து பக்கம் இருக்கும் என நம்புகிறேன்” என ராஸ் டெய்லர் கூறியிருக்கிறார்.