ஆகஸ்ட் 1, 1915க்குப் பிறகே கலிப்பொலியில் பெருமளவில் எந்தத் தாக்குதலையும் பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை. பொதுமக்கள் வேறு கலிப்பொலி போர் குறித்து பலத்த விமர்சனம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
கலிப்பொலியில் தொடர்ந்து தங்கள் ராணுவத்தை தங்க வைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று பல பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளும் கூறத் தொடங்கினர். பலத்த விவாதத்துக்குப் பிறகு கலிப்பொலியிலிருந்து ராணுவத்தை பின்வாங்க முடிவு எடுக்கப்பட்டது. தவிர மேற்கு முனையில் மேலும் அதிக அளவில் ராணுவத்தினர் தேவைப்பட்டனர்.

அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் அரசு ஜெனரல் சர் இயான் ஹாமில்டன் என்பவரைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சர் சார்லஸ் மன்ரோ என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தியது. அவர் பதவியேற்ற உடனேயே கலிப்பொலியிலிருந்த அன்ஸக் மற்றும் சுவ்லா பகுதிகளிருந்து தங்கள் ராணுவத்தினைப் பின்வாங்கும் ஆணையைப் பிறப்பித்தார். 1915 நவம்பர் 22 அன்று ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. நவம்பர் 13 அன்று ஒரு சிறிய படகில் ஏறி ஃபீல்ட் மார்ஷல் கிச்னெர் கலிப்பொலிக்குச் சென்றார். அங்குள்ள சூழலைக் கணித்தார்.
ராணுவத்தை பின்வாங்கச் செய்யும் போது பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுமென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாக பிரிட்டிஷ் ராணுவம் செயல்பட்டது. தாங்கள் பின் வாங்கப் போவதைத் துருக்கியர்களுக்குத் தெரியாமல் பார்த்து கொண்டது. இதன் காரணமாக போர்க்கப்பல்களில் ராணுவத்தினரை ரகசியமாக ஏற்றி வெளியே கொண்டு வர முடிந்தது.




கலிப்பொலி போரில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நேசநாடுகள் அணியின் ராணுவ வீரர்கள் இறந்தனர். என்றாலும் இந்த வெற்றியை ஓட்டோமான் சாம்ராஜ்யத்தால் பெரிதாகக் கொண்டாட முடியவில்லை. காரணம் இந்த மோதலில் அவர்கள் அணியைச் சேர்ந்த 85,000 பேருக்கும் அதிகமானோர் இறந்திருந்தனர்.