பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதைப் பார்த்து தமிழ்நாட்டின் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் வாயிலும், வயிற்றிலும் அடிக்காத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். “அஸ்வினுக்கு என்னடா குறை? உலகின் பெஸ்ட் பவுலர்களில் ஒருவர் மட்டுமில்ல. ஒரு ஜெனியூன் ஆல்ரவுண்டர் அவரக் கூட சேக்கலயே” என புலம்பிக் கொண்டிருப்பதை கேட்கவும். சமூகவலைதளங்களில் பார்க்கவும் முடிகிறது.

தமிழ்நாட்டில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் கூட உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெறாதது, ஐபிஎல்லில் கோலோச்சும் சிஎஸ்கே காரர்கள் என்ற மிதப்பில் இருக்கும் நம் ரசிகர்களுக்கு ஜீரணிக்க சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. கடந்த முறை இடம்பெற்ற அஸ்வின் இம்முறை உலகக் கோப்பை அணியில் இடம்பெறமாட்டார் என்பது பல மாதங்களுக்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிட்டுக் காட்டிவிட்டது. ஸ்ரீகாந்த், ராபின் சிங், டபிள்யூ வி ராமன், பரத் அருண், எல். பாலாஜி, சடகோபன் ரமேஷ் ஸ்ரீராம், தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், வாஷிங்டன் சுந்தர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு தமிழ்நாட்டு வீரர், 50 ஓவர் அணியில் இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை உலகக் கோப்பையில் நம் ஊரில் இருந்து ஒருவர் கூட தேர்வாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மட்டுமா இப்படி என்றால் இல்லை. இந்திய கிரிக்கெட் அணியில் தெற்கு தேய்கிறதோ என்றெண்ணும் வகையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, ஐதராபாத், தெலங்கானா என 6 ரஞ்சி அணிகள் இடம்பெற்றுள்ள தென் மாநிலங்களில் இருந்து இருவர் மட்டுமே உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள தகவல் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அசாருதீன், விவிஎஸ் லக்ஸ்மன், வெங்கடபதி ராஜு, விஜய் பரத்வாஜ் என களைகட்டிய ஆந்திர அணியில் இருந்து ஒருவர் கூட உலகக் கோப்பைக்கு இம்முறை தேர்வு பெறவில்லை. இதுபோல் உலகக் கோப்பை போட்டிகளில் கலக்கிய ஸ்ரீசாந்த்தின் சொந்த மாநிலமான கேரளாவில் இருந்து பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த ராஜஸ்தான் ஐபிஎல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், மோசமான பார்ம் காரணமாக கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : நோ சர்ப்ரைஸ்.. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ..!

ஆனால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்பது போல் கர்நாடகாவில் இருந்து செலக்டர்களின் ஆல்டைம் பேவரிட்டான கே.எல். ராகுலும், ஐதராபாத்தில் இருந்து திறமையின்பால் வளர்ந்து வரும் முகமது சிராஜும் உலகக் கோப்பைக்கு தேர்வாகியிருப்பது சற்று ஆறுதல்.ஆனால் அதே நேரத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இருந்து கணிசமான வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி

குஜராத் மாநிலத்தில் பரோடா, குஜராத் என இரு ரஞ்சி அணிகள் இருக்கும் நிலையில் அந்த ஒரே மாநிலத்தில் இருந்து ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், பும்ரா என நான்கு பேர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் உலகக் கோப்பையில் ஒருவர் கூட இடம்பெறாத மாநிலமாக இருந்த குஜராத்தில் இருந்து 4 பேர் தற்போது உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர் .

மறுபுறம் எப்போதும் போல் மும்பை, டெல்லியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உலகக் கோப்பையில் இம்முறையும் இடம்பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து கோலி, கில் மற்றும் இஷான் கிஷண் ஆகியோரும், மும்பையில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, ஷர்துல் தாகுர், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் 15 பேர் பட்டியலில் தேர்வாகியுள்ளனர்.

இதையெல்லாம் பொருத்திப் பார்த்தால் இந்திய கிரிக்கெட் அணியில் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்னும் அரசியல் வசனம் நினைவுக்கு வந்து போவதை மறுக்கமுடியவில்லை!

மாநிலம் மற்றும் வீரர்கள் விவரம்

குஜராத் (4): ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், பும்ரா

மும்பை (4) : ரோகித், ஷர்துல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ்

டெல்லி (3): ஷுப்மன் கில், விராட் கோலி,

இஷான் கிஷன் ( ஜார்க்கண்ட்)

முகம்மது ஷமி (மேற்கு வங்கம்)

முகமது சிராஜ் (ஐதராபாத், தெலங்கானா)

கே. எல். ராகுல் (கர்நாடகா)

குல்தீப் யாதவ் (உத்தரப் பிரதேசம்) இடம்பெற்றுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: