அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்கு கட்சி எல்லைகளைக் கடந்து ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் அந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற எம்.பி-க்கள் முயன்றனர்.

ஆனால், சரத் யாதவ் போன்ற சில எம்.பி-க்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில், சரத் பவார், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, உமாபாரதி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அந்தக் குழு, சில பரிந்துரைகளை அளித்தது. மீண்டும் 1996-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.