காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு சுமார் 18 லட்சம் இந்தியர்கள் அல்லது இந்திய பூர்வீக குடிமக்கள் வசிக்கும் சூழலில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கொல்லப்பட்டார். மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சீக்கியர்களுக்கு இந்தியாவிடம் இருந்து தனி நாட்டை பெறுவதற்கு ஹர்தீப் சிங் முயற்சி மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தை நேற்று கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே புகாரை பிரதமர் மோடியை சந்தித்தபோது கனடா பிரதமர் ட்ரூடோ கூறியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா புகலிடம் கொடுத்துள்ளது. அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் விஷயத்தில் இருந்து கனடா அரசு கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது’ என்று கூறியுள்ளது.
கனடா பிரதமரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அங்கிருந்த இந்திய உயர் அதிகாரி ஒருவரை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. அவர் தான் கனடாவில் செயல்பட்ட இந்திய உளவு பிரிவின் தலைவர் என்று கூறியதாக கனடா அரசு கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக கனடா தூதரக உயர் அதிகாரியை இந்தியாவை விட்டு 5 நாட்களில் வெளியேறுமாறு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இவ்வாறாக கனடா மற்றும் இந்தியாவின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க – உலக நாடுகளில் கடைசி இடத்தை பிடித்த இந்தியா… எதில் தெரியுமா?
இதனால் இரு நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்சூரன்ஸ் திட்டங்களுக்காக கனடா அரசு இந்தியாவில் ரூ. 3.74 லட்சம் கோடியை முதலீடு செய்திருக்கிறது. இது இந்தியா பெறும் 4 ஆவது அதிகபட்ச அந்நிய முதலீடு ஆகும். இதில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கனடாவில் சீக்கியர்கள் சுமார் 7.77 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். அவர்களை தவிர்த்து கணிசமான எண்ணிக்கையில் மற்ற இந்திய பூர்வீக குடிமக்கள் வசிக்கிறார்கள். தற்போது இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி கனடா வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.