விழுப்புரம் நகரிலுள்ள சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதி குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே, இந்தச் சாலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே, அந்தச் சாலையின் நிலை மற்றும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து நேற்றைய தினம் (18.09.2023) ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் நேரலை காட்சிகளைப் பதிவுசெய்தோம்.
அது விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்ற நிலையில், தற்போது அந்தப் பழுதுகளை சீரமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இந்தப் பகுதியில் நெடுஞ்சாலையை அமைத்த ஒப்பந்ததாரரிடமே, சாலையில் ஏற்பட்டிருக்கும் பழுதை சரிசெய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. அதன்படி, சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசின் இந்த துரித செயல்பாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.