பிசிசிஐ-யின் கௌரவ செயலாளரான ஜெய் ஷா, நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கியிருக்கிறார்.
உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கவிருக்கிறது. இதற்கு முன் 1987, 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைத் தொடர்களை இந்தியா நடத்தியிருந்தாலும், அதில் மற்ற சில நாடுகளின் பங்களிப்பும் இருந்தது. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இணைந்தே இந்தியா அந்த உலகக்கோப்பைகளை நடத்தியிருந்தது. ஆனால், இப்போது முதல் முறையாக இந்தியா மட்டுமே தனியாக ஒரு உலகக்கோப்பைத் தொடரை நடத்தவிருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த உலகக்கோப்பைத் தொடரை பிரபலமாக்கும் விதமாக பிசிசிஐ சார்பில் முக்கியஸ்தர்கள் சிலருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த கோல்டன் டிக்கெட்டைப் பெறுபவர்கள் பிசிசிஐயின் விருந்தினர்களாகக் கருதப்படுவர். அவர்கள் உலகக்கோப்பையில் நடைபெறும் அத்தனை போட்டிகளுக்கும் நேரில் விருந்தினராக சென்று கலந்துகொண்டு போட்டிகளைக் கண்டுகளிக்க முடியும். இதற்காகத்தான் அந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
முன்னதாக, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டை வழங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருக்கும் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கியிருக்கிறார்.
இதைப் பற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, “பிசிசிஐ-யின் கௌரவ செயலாளரான ஜெய் ஷா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். ரஜினிகாந்த் வசீகரம் மற்றும் திரைத்துறையின் மேதமைக்கான மொத்த உருவகமாகத் திகழ்பவர்.
The Phenomenon Beyond Cinema!
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR
— BCCI (@BCCI) September 19, 2023
மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து பல லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரை எங்களின் விருந்தினராக உலகக்கோப்பைக்கு அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உலகின் மாபெரும் போட்டிகளில் தன்னுடைய வருகையால் ஒளியேற்றவிருக்கிறார், ரஜினிகாந்த்!” என பிசிசிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கினாலும், இந்தியா தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்தே ஆடுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்தப் போட்டியை ரஜினிகாந்த் நேரில் காண்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.