சென்னை: எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 13 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 390 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 374 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த சஞ்சு. இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்கப் பெறாமல் உள்ளது. மாற்று வீரராக இவரை பார்ப்பதாக சமயங்களில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிப்பர்.
கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி இருந்தார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடி இருந்தார்.
அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை தொடருக்காக இலங்கை சென்றிருந்தார். கே.எல்.ராகுல், ஃபிட் என அறிவிக்கப்பட அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தொடரிலும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த நிலையை மாற்ற முடியாது, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளை குறிப்பிடும் வகையில் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். “நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்” என நம்பிக்கையுடன் அவர் அதில் தெரிவித்துள்ளார்.