உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சாலையில் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவியை பைக்கில் வந்த இரண்டு பேர் கிண்டல் செய்ததோடு, அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதில் அம்மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் போலீஸாரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை போலீஸார் மீண்டும் பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசுகையில், “சட்டம் அனைவரையும் பாதுகாக்கும். யாராவது பெண்களை துன்புறுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்காக எமராஜன் காத்திருக்கிறார்.

அவர்களுக்காக அடுத்த கிராஸிங்கில் எமராஜன் காத்திருப்பார். அவர்களை எமராஜாவிடம் அனுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலுவான சட்ட அமைப்பு தேவை. சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்ககூடாது. நலத்திட்ட உதவிகள் பாரபட்சம் இன்றி அனைவரையும் சென்றடைய தனது அரசு உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சிப்பணியில் எந்த மட்டத்திலும் கவனக்குறைவாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை அகற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு கிரிமினல்கள் மற்றும் மாபியா கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், உ.பி அரசாங்கம் அது எதையும் கண்டு கொள்வதில்லை. !