‘கொஞ்சம் தாமதமாக தொலைக்காட்சியை ஆன் செய்திருந்தீர்கள் எனில், நீங்கள் இதை தேநீர் இடைவேளை என நினைக்கக்கூடும். ஆனால், மன்னிக்கவும். இது இடைவேளை அல்ல. இலங்கையின் இன்னிங்ஸ் அத்தனை விரைவாக முடிந்திருக்கிறது.’ இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட் ஆன சமயத்தில் வர்ணனையில் இப்படி ஒரு குரல் ஒலித்தது. ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை புரட்டி எடுத்திருக்கிறது.

இந்தியா சார்பில் சிராஜ் மேஜிக் செய்திருக்கிறார். 7 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதுவும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பௌலர் சிராஜ்தான்.

இலங்கை அணியின் பேட்டர்களை பதிலே இல்லாமல் செய்த சிராஜ் இந்த பந்துவீச்சிற்கு பிறகு பேசும்போது, ‘இது ஒரு கனவைப் போன்று இருக்கிறது.’ என பேசியிருக்கிறார். அவர் பேசியவை. ‘ஆம், இது ஒரு கனவைப் போன்றதுதான். இதற்கு முன்பு இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தேன். அப்போது என்னால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.
உங்களுக்கு எது கிடைக்க வேண்டும் என்றிருக்கிறதோ அது கட்டாயம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.

கடந்த போட்டிகளில் என்னால் பந்தை பெரிதாக ஸ்விங் செய்யவே முடியவில்லை. ஆனால், இன்று என்னால் ஸ்விங் செய்ய முடிந்தது. பேட்டர்களை ஒவ்வொரு பந்தையும் ஆட வைத்துவிட வேண்டும் என நினைத்தேன். பெரிதாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. சரியான லைன் – லெந்த்தில் வீச வேண்டும் என்பதில்தான் கவனம் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘Wobble – Seam’ களில்தான் விக்கெட்டுகளை வீழ்த்துவேன். இன்று அவுட் ஸ்விங்கர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.’ என சிராஜ் 6 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்தினார் என்பது குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
சிராஜின் பந்துவீச்சு பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்!