கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதையடுத்து 5 வருடங்களுக்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம் 3.40 மணிக்கு தொடங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா – பாதும் நிஸ்ஸங்காவின் பாட்னர்ஷிப்பை முதல் ஓவரிலேயே காலி செய்தார் பும்ரா. குசல் பெரேரா டக் அவுட்டானார். ஆடுத்து 4ஆவது ஓவரில் தான் அந்த மேஜிக் நடந்தது.

4ஆவது ஓவரை சிராஜ் வீச, நிஸ்ஸங்கா விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இது இலங்கை ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்து சிராஜ் வீசிய 6ஆவது ஓவரில் தசுன் ஷனகா டக் அவுட்டானார். இதன் மூலம் 2 ஓவர்களை மட்டுமே வீசிய முஹம்மது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 6 ஓவருக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை, 10 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களைச் சேர்த்தது.

11வது ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் குசல் மெண்டிஸ் 17 ரன்களில் கிளம்பினார். துனித் வெல்லலகே 8 ரன்களிலும், பிரமோத் மதுஷன் 1 ரன்னிலும், மதீஷ பத்திரன டக்அவுட்டாக 15.2 ஓவர் முடிவில் 50 ரன்களுக்குள் சுருண்டது இலங்கை. இந்தியா அணி தரப்பில் முஹம்மது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை விரட்டிய தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், சுப்மன் கில் அடித்து ஆடினர். 6.1 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தனர். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் 2வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மொத்தம் 8 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: