கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், ராணுவ வீரர் உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. தொடர்ந்து காரின் பின்னால் வந்த லாரியும் மோதியது. இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் அடுத்த 20-வது நிமிடத்தில் அடுத்தடுத்து வந்த 3 லாரிகள், 6 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 7 பேரை குருபரப் பள்ளி போலீஸார் மற்றும் பொது மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால், இச்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.