Delhi
oi-Nantha Kumar R
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் தான் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது மே மாதம் மத்தியில் உச்சமடையும் எனவும், அப்போது நாட்டின் கொரோனா பாதிப்பு எவ்வளவாக இருக்கும்? என்பது பற்றியும் ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்தீர அகர்வால் கணிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா பரவல் தொடங்கியது. அதன்பிறகு அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளை கொரோனா வைரஸ் முடக்கி போட்டது. இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இதற்கிடையே தான் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் தடுப்பூசி செலுத்தியது மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இயல்பாய் உருவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவற்றால் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தது. இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உலகம் இயல்பு நிலைக்கு தொடங்கியது.
இந்நிலையில் தான் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 29 பேர் இறந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் தற்போது நாட்டில் 49,622 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதும், பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 64 ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹரியானா, புதுச்சேரியில் பொது இடங்களிலும், கேரளாவில் கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் ஐஐடி கான்பூர் பேராசிரியரான டாக்டர் மணிந்தீர அகர்வால் கொரோனா பரவல் குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்த தகவல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பேராசிரியர் மணிந்தீர அகர்வால் கூறியுள்ளதாவது:
கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வார்னிங்
கொரோனா பாதிப்பு தற்போது நாட்டில் அதிகரித்து வருகிறது. மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா பாதிப்பு என்பது உச்சத்தை எட்டலாம். கணித மாதிரியின் அடிப்படையில் நாங்கள் கணிப்பு செய்துள்ளோம். அதன்படி மே மாதத்தில் 50,000 முதல் 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதான் தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பின் உச்சநிலையாக இருக்கும்.
இதுதொடர்பான துல்லியான கணிப்பு இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக வெளியிடப்படும். உச்சநிலையில் 50 ஆயிரம் கொரோனா பாதிப்பு என்பது இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகம் என்பது இல்லை. ஏனென்றால் இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் அதிகமாகும். தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் என்னவென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட மக்களிடம் உள்ள சக்தி என்பது 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. 2 வது காரணம் என்னவென்றால் அது கொரோனா வைரஸ் வேகமாக பரவுவது தான். மேலும் தற்போது லேசான அறிகுறிகள் தான் உள்ளன. சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் வீடுகளிலேயே தனிமை சிகிச்சை பெறுகின்றனர். இதனால் கொரோனா என்பது சாதாரண காய்ச்சல் போன்றதாக தான் ட்ரீட் செய்யப்படுகிறது. 2வது அலையை போன்று பாதிப்பு எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
English summary
Daily corona cases in India have crossed 10 thousand. In this case, it is said that the current corona virus will peak in the middle of May, and then how much will the country’s corona virus be? IIT Kanpur Professor Maninder Agarwal has published a prediction about this. He has also explained the reason for the increase in the number of corona cases.