கோவை: கோவை ஹோட்டல் அறையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழந்ததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள சப்பட்டை கிழவன்புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (35). கார் டீலர் தொழில் செய்து வந்தார். இவர் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தொழிலில் கிடைத்த தொகை மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் கடன் வாங்கியும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால், இதில் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. தவிர, கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சபாநாயகம் ஒரு வேலை விஷயமாக கோவைக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு, நேற்று (ஏப்.14) மதியம் கோவைக்கு வந்தார். காந்திபுரம் 7-வது வீதி விரிவாக்கப பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். இன்று (ஏப்.15) அதிகாலை அறையை காலி செய்து விடுவதாக சபாநாயகம் ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், கூறியபடி அவர் அறையை காலி செய்யவில்லை.

ஹோட்டல் ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவியை பயன்படுத்தி அறைக்கதவை திறந்து உள்ளே சென்றனர். குளியல் அறை அருகே, சபாநாயகம் அசைவற்று கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் தகவல் தெரிந்து அங்கு வந்து பார்த்த போது, சபாநாயகம் உயிரிழந்தது 5 மணி நேரத்துக்கு மேல் ஆனதும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கேற்று ரூ.90 லட்சம் வரை தொகையை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலாலும், கடன் நெருக்கடியாலும் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அறையில் சபாநாயகம் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில்,‘ என் முடிவுக்கு நான் தான் காரணம். ரூ.90 லட்சம் தொகையை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். தந்தை, தாயை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்கையும், அவரது கணவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’’எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிலரது பெயரை எழுதிவிட்டு அடித்துள்ளார். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *