பொதுவாகப் பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கும்போதோ திட்டும்போதோ, அவர்களைவிடப் பெரியவர்களிடம் குழந்தைகள் போய் தஞ்சமடைவதுண்டு. அவர்களும் `விடு… குழந்தைதானே’ என, அடிக்க வரும் பெற்றோரைச் சமாளிப்பதுண்டு. இந்த வேலையை அதிகம் செய்வது தாத்தாவும் பாட்டியுமாகத்தான் இருக்கும்.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன், 24 மணிநேரமாகத் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி 130 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இவ்வளவு வேகம், இவ்வளவு கோவம் வேறெதற்கும் இல்லை, அம்மாவுக்கும் தனக்கும் நடந்த சண்டை குறித்து, தன் பாட்டியிடம் புகார் கூறத்தான்.
இவ்வளவு தூரம் தொடர்ந்து பயணித்ததால், சிறுவன் சோர்வடைந்திருக்கிறார். எக்ஸ்பிரஸ்வே டன்னலில் சிலர் சிறுவனின் நிலையைக் கண்டு, காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறையினர் அங்கு வந்து சிறுவனை மீட்டு காரணத்தை விசாரித்து இருக்கின்றனர்.
சிறுவன் அவர்களிடம், `அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வந்தது. அப்செட்டாக இருக்கிறது. அதனால் மெய்ஜியாங்கில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு அம்மாவைப் பற்றி புகார் கூறக் கிளம்பிவிட்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.