ஹமிர்பூர்: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.,3,200 கோடி செலவிடப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (சாய்) வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாட்மிண்டன் அரங்கம், ஜூடோ அரங்கம் உள்ளிட்டவற்றை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று திறந்துவைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது. ஹமிர்பூரில் உள்ள சாய் மையத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய செயல்திறன் மையம் (என்சிஓஇ) விரிவுபடுத்தப்படும்.
இதேபோல் நாட்டில் உள்ள அனைத்து சாய் மையங்களிலும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இதற்காக ரூ.3,200 கோடியை மத்திய அரசு செலவிடும். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.
என்சிஓஇ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்பு வசதி, நவீன கருவிகளை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இளம் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பயிற்சி பெற்று சர்வதேச தரத்துக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.