
பஞ்சாப்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியான சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான சேலம் மாவட்டம் நங்கவள்ளி பனங்காட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வனவாசி சாலையில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ வீரராக பணியாற்றிய கமலேஷ் உடலுக்கு உரிய அரசு மரியாதை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கமலேஷ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து எந்தவித தகவலையும் இதுவரை ராணுவம் வெளிப்படுத்தவில்லை. எனவே அவர்கள் இறப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ராணுவ வீரர் கமலேஷ் வீர மரணம் எய்தவில்லை, முகாமுக்குள் நடந்த பிரச்னையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே ராணுவ தரப்பிலிருந்து எவ்வித நடைமுறையும் தமிழக அரசுக்கு சொல்லப்படவில்லை. எனவே தான் அரசு அதிகாரிகள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தொடர்ந்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா மற்றும் சேலம் தேசிய மாணவர் படை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் உறவினர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 1.30 மணி நேரம் இந்த சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.