திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே ராமநவமி உற்சவ விழாவில், ராமர்-சீதை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே செட்டிவாரிப்பள்ளி கிராமத்தில் கோதண்டராமசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 106-ம் ஆண்டு ராமநவமி உற்சவவிழா கடந்த 9-ம்தேதி கருட சேவையுடன் தொடங்கியது.
இதன்தொடர்ச்சியாக 10-ம் தேதி ஹனுமன் சேவை, 11-ம் தேதி வீரபத்தரசுவாமி உற்சவம், 12-ம்தேதி அஸ்வ வாகன சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த ராமநவமி உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை ராமர்- சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை, பழங்கள், பட்டு வஸ்திரங்களுடன் ஊர்வலமாக பெண்கள் கோயிலுக்குச் சென்றனர். பிறகு, ஹோம குண்ட பூஜை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருகல்யாண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.