வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ முறைகேடு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான விபரங்களை தாக்கல் செய்யும்படி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காங்கிரசின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அப்போது தகவல் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, அந்த கட்சி எம்.பி., கனிமொழி மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம் ராஜா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து, 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும், விசாரணையை தினம் தோறும் நடத்த வேண்டும் என்றும் சி.பி.ஐ., சார்பில் நேற்று முறையிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, ”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்களது எழுத்துப்பூர்வமான விபரத்தை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும்,” என, உத்தரவிட்டார்.
Advertisement