Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தற்போது சூடு பிடித்து வருகிறது. பாஜக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கெனவே கைதானவர்களின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை ஒரு பிளாஷ்பேக்காக பார்ப்போம்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆருத்ரா எனும் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கூறியிருந்தனர்.

இதை நம்பி லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ முதலீட்டாளர்களுக்கு சொன்னது போல் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கூறினர்.
ஆசியம்மாள் விசாரணை: இந்த வழக்கு தொடர்பாக ஐஜி ஆசியம்மாள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 1,09,255 பேர் ரூ 2438 கோடி வரை முதலீடு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பணம் கொடுத்த ஹரீஷ் : அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரீஷ், தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது வெளியானது. பணம் கொடுத்ததால்தான் ஹரீஷுக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். அந்த பொறுப்பை பெறுவதற்கு பாஜகவை சேர்ந்த சிலருக்கு மோசடி பணத்திலிருந்து ஹரீஷ் பங்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பகீர் கிளப்பிய ஹரீஷ்: இதன் காரணமாக பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அலெக்ஸ் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். சுதாகர் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகியாகவும் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஹரீஷிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பணம் பெற்றது உண்மையா: அலெக்ஸ், சுதாகர் ஆகியோருக்கும் பணம் கொடுத்ததாக ஹரீஷ் ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார். சுதாகரிடம் விசாரித்ததில் தான் பணம் பெற்றது உண்மைதான் என்றும் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு: நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ரூ 15 கோடி பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவருடைய செல்போனும் கடந்த 2 மாதங்களாக ஸ்விட்ச் ஆப் ஆனதாக சொல்லப்பட்டது. அவரை தனிப்படை போலீஸார் தேடி வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆயிரம் கோடி மோசடி: இந்த நிலையில் நேற்றைய தினம் மைக்கேல் ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மைக்கேல் ராஜ், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாண்டவர் என தெரியவந்தது. துபாய்க்கு தப்பி செல்ல இருந்த நிலையில் அவர் கைதானார். ரூ 1749 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வாங்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இன்றைய தினம் பாஜகவிலிருந்து வெளியான மாநில நிர்வாகி கிருஷ்ணபிரபு பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறிவிட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
English summary
What happened in Aarudhra scam case? How it reflects in Tamilnadu BJP? Who are all involved in this scam?