உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ள தென் கொரியாவில், குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தென் கொரியா, உலகளவில் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில், அந்த நாட்டில் ஒரு பெண்ணின் சராசரி குழந்தை எண்ணிக்கையானது, 0.78 ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டின் விகிதமான 0.81 என்பதைவிட குறைவாகும். பொதுவாக, மக்கள் தொகையை நிலையானதாக வைத்திருக்கத் தேவைப்படும் பிறப்பு எண்ணிக்கை விகிதம் 2.1 ஆகும்.
கடினமான பணிச்சூழல், நிலையான வேலைவாய்ப்பு இல்லாதது, முறையான வீட்டுவசதியின்மை, கல்விச் செலவுகள் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவை, மக்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் காரணிகள்; அவற்றைத் தடுக்க உரிய வழிமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டுமென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்தனர்.
இதையடுத்து, குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, கடந்த சில ஆண்டுகளாகவே தென் கொரிய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைபெறும் தாய்மார்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகளை அரசு வழங்கி வருகிறது.