சேலம்: சேலத்தில் காரைத் துரத்தி பிடித்து 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மத்திய புலனாய்வு போலீஸார், தப்பி ஓடிய மூவரை தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைத் தடுப்பு பிரிவு மத்திய புலனாய்வு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் வந்த காரை போலீஸார் பின் தொடர்ந்ததை அடுத்து, கடத்தல் கும்பல் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் காரை நிறுத்தாமல் தடுப்புகளை தட்டி விட்டுச் சென்றது. கஞ்சா கடத்தி செல்வதை உறுதி செய்த போலீஸார், காரைப் பின் தொடர்ந்து விரட்டினர். சேலம் நோக்கி சென்ற கார், உடையாப்பட்டி அருகே வேகமாக சென்றது. போலீஸார் தொடர்ந்து கஞ்சா கடத்தல் காரை விரட்டி சென்றதை அடுத்து, உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி செல்லும் சாலையில் காரை ஓட்டிச் சென்றனர்.
கிராம சாலையில் சென்ற கடத்தல் கார், சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்தொடர்ந்து வந்த போலீஸார், காரை கைப்பற்றி, அதில் இருந்த 200 கிலோ கஞ்சா பண்டலை பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ரூ.40 லட்சம் மதிப்பு இருக்கும் என போலீஸார் கணித்துள்ளனர். பறிமுதல் செய்த கஞ்சா மற்றும் காரை இரும்பாலை மதுவிலக்கு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி சிவக்குமார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டலை பார்வையிட்டு, தப்பி ஓட்டம் பிடித்த மூவரை விரைந்து கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.