அமைப்புரீதியாக, 83 மாவட்டச் செயலாளர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்களிடம், தலா 500 பேரை அவரவர் மாவட்டத்திலிருந்து அழைத்து வரும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் ஏற்க வேண்டும். இதுபோக, சில சமூக அமைப்புகள் மூலமாகவும் ஆட்களைத் திரட்டிவரும் வேலைகள் தீவிரமடைந்திருக்கின்றன.
அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்களும் விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையே 50,000 கடந்துவிடும். விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை தன் அருகில் வைத்திருப்பதன் மூலம், முக்குலத்தோர் – முத்தரையர் சமூக அரசியல் கணக்கை உருவாக்கிட முயற்சிக்கிறார் ஓ.பி.எஸ். இந்த சமூக அரசியல் கணக்கு ஒர்க் அவுட்டானால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் எடப்பாடி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.