Lucknow
oi-Halley Karthik
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று வைரஸானது உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கில் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தியது. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிக்கப்பட்ட பின்னர் இதன் வீரியம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் போதுமான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், மருத்துவமனைகள், கிளினிக்குகள் போன்றவற்றில் மருத்துவர் மட்டுமல்லாது நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும், துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உத்தரப் பிரதேசத்தில் தொற்று பாதிப்பு குறைவாகதான் இருக்கிறது. எனவே இதனை கண்டு பயப்பட தேவையில்லை. தொற்று பாதிப்பு கட்டுக்குள்தான் இருக்கிறது. ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டதில் நிலைமை கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கூறியுள்ளனர்.
பாஜக பக்கம் திரும்பிய ஆருத்ரா முதலீட்டாளர்கள் கோபம்! சென்னை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசம்!
இருப்பினும் கடந்த கால அனுபவங்களை கொண்டு தற்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ் பாதிப்பிலிருந்து நாம் வெளி வர வேண்டும். கடந்த 11ம் தேதியன்று மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் கொரோனா அவசரக்கால தடுப்பு ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. இந்த ஒத்திகையின்போது சில குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டுமல்லாது லக்னோ, கவுதம் புத்த நகர், காசியாபாத், வாரணாசி, ஆக்ரா மற்றும் மீரட் மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று தெரிய வந்திருக்கிறது.
எனவே இந்த மாவட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இங்கு பாசிட்டிவ் ரேட் குறைவாகதான் இருக்கிறது. எனவே பயப்பட தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால கொரோனா சிக்கிச்சை மருத்துவமனைகளை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். முதியவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள் கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதே போல மருத்துவமனைகளிலும் அவர்களுக்கு தேவையான முன்னுரிமை கொடுக்கப்படும்.
கடந்த இரண்டு கோரோனா தொற்று பாதிப்பானது எப்படி பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் சிறப்பாக எதிர்கொள்ளப்பட்டதோ அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாஜக தலைமையின் கீழ் நோய் தொற்று பாதிப்பானது சிறப்பான முறையில் எதிர்கொள்ளப்படும்” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that the corona infection is under control in Uttar Pradesh, but as a precautionary measure emergency corona treatment hospitals should be activated.