மதுரை: மதுரை ஆவினில் பால் விநியோகிப்பதில் பிரச்சினை இருப்பதாகவும், கனிணிசார் தொழில்நுட்ப பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்றும் முகவர்கள் கூறும் நிலையில், அதுபோன்ற ஒரு பிரச்சினையே இல்லை என்று ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரில் செயல்படும் ஆவின் நிர்வாகம் மூலம் மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முகவர்களுக்கு காலை, மதியம், இரவு என, மூன்று நேரமும் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் முகவர்களுக்கு பால், தயிர், மோர் எவ்வளவு தேவையோ அதற்குரிய பணத்தை மண்டலங்கள் வாரியான அலுவலகங்களில் முதல் நாளே செலுத்துவது வழக்கம். அதன்படி, பணம் செலுத்த சென்ற முகவர்களிடம், ''மதுரை அண்ணா நகர் ஆவின் அலுவலகத்தில் கணினி மென்பொருளில் (சாப்ட்வேர்) பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த 15-ம் தேதி எவ்வளவு பணம் செலுத்தினீர்களோ அந்த அளவு பணத்தையே செலுத்தவேண்டும். அன்றைய தினம் என்ன ஆர்டர் கொடுத்திருந்தீர்களோ அது மட்டுமே நாளை விநியோகிக்க முடியும்'' என அதிகாரிகள் தரப்பில் கூறியதாக முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.