
சென்னை: சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வாராப்பூர் உள்வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (10), மகேந்திரன்(7) மற்றும் சந்தோஷ் (5) ஆகிய மூன்று சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (16) அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.