ஆசீம் ராஜா நீக்கம் குறித்துப் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஒன்றியச் செயலாளர் ஒருவர், “கவுன்சிலர், மாநகரச் செயலாளர், மாநகராட்சிப் பணிகள் குழுத் தலைவர், மண்டலப் பொறுப்பாளர் என ஆவடியில் கட்சி ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் தன் வசமே வைத்துக்கொண்டார் ஆசிம் ராஜா. அதோடு, நாசர் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தங்கும் நாள்களில் எல்லாம் ஆவடியில் அமைச்சர் கான்வாய் போல ஆசிம் ராஜாவின் காருக்குப் பின்னால்தான் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் மகனை மேயராக்கி அழகுபார்க்க வேண்டும் என நினைத்த நாசருக்கு ஆவடி மாநகராட்சியைத் பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கி ஷாக் கொடுத்தது தலைமை. அதில் அப்செட்டான அமைச்சர் மேயராகத் தன்னுடைய சொல்படி கேட்கிற உதயகுமாரை நியமித்தார். அப்போது முதல் இப்போது வரை பெயரளவுக்கே உதயகுமார் மேயராக இருக்கிறார். பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவது முதல் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவது வரை மாநகராட்சியில் முக்கிய முடிவுகளை ஆசிம் ராஜாதான் எடுக்கிறார்.
அதுமட்டுமல்ல, நிர்வாகத்தைக் கவனிக்க ஏதுவாக ஆசிமுக்கு, மேயர் அறை பக்கத்தில் அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேயரை பார்க்க வரும் அதிகாரிகள், அலுவலர்கள் முதலில் ஆசிமைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. கோப்புகளை ஆசிம் தரப்பு பார்த்த பின்னர்தான் உதயகுமார் கையெழுத்துப் போடவேண்டும் என வாய்மொழி உத்தரவே போடப்பட்டுள்ளது.” என்றவர்…
“கட்சிரீதியிலும் ஆசீம் ராஜாவின் செயல்பாடுகளால் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் எனத் தொடங்கிய வட்டச் செயலாளர் ஒருவர், “ஆவடி மாநகராட்சிக்குள் நடக்கும் விழாக்களில் கட்சியினர் அடிக்கும் பேனர்கள், போஸ்டர்கள் கொடுக்கும் விளம்பரங்களில் தன் பெயருக்குக் கீழ்தான் மேயரின் பெயரும் இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இப்போதுவரை இந்த நடைமுறையைத்தான் கட்சியினர் பின்பற்றி வருகிறார்கள்” என நிர்வாக ரீதியில் மாநகராட்சியில் ஆசிம் ராஜாவின் தலையீடுகள் குறித்து விவரித்தார்.