`சதி’ எனப்படும் உடன்கட்டை ஏறுதலை பா.ஜ.க எம்.பி. சந்திர பிரகாஷ் ஜோஷி நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியதாக, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக, அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஷி, ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜி படையெடுப்பின்போது தன் மானம் காக்க தனக்குத் தானே தீக்குளித்ததை குறிப்பிட்டுப் பேசினார்.
கனிமொழி, தயாநிதி மாறன், சுப்ரியா சூலே, ராஜா, கே. முரளிதரன், இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், அவர் சதியை பெருமிதமாகக் குறிப்பிட்டதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து குரல் எழுப்பினர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை தங்களது இருக்கைகளுக்குச் சென்று அவையை செயல்பட அனுமதிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். ’நான் பதிவை சரி பார்க்கிறேன். தயவுசெய்து உட்காருங்கள்’ என்றார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 1.30 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மீண்டும் பிற்பகல் 1:30 மணிக்கு அவை தொடங்கியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகர், `நீங்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்த பிரச்னை நீக்கப்படும்’ என்று உறுதியளித்தார். மேலும் ஜோஷியை தனது உரையைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
தன் உரையை தொடர்ந்த, ராஜஸ்தானின் சித்தோர்கர் தொகுதி எம்.பி.யான ஜோஷி, தானோ அல்லது தான் சார்ந்த பா.ஜ.கவோ ’சதி’ எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆதரிக்கவில்லை என்றார். தான் ராணி பத்மாவதி பற்றியே பேசியதாகவும், சதி பற்றி பேசவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், ‘ ‘சதி பிரதா’ பற்றி பேசவில்லை, ‘சத்தித்வா (தூய்மை)’ பற்றி பேசினேன். மொழிப்பெயர்ப்பில் ‘சத்தி’ என்பது ‘சதி’ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என்று விளக்கம் தந்தார்.
இதனையடுத்து பேசிய தி.மு.க உறுப்பினர் கனிமொழி, “ஒவ்வொரு நாடும் அதன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசும்போது, அதற்கு வெவ்வேறு கடந்த காலங்கள், அதன் கடந்த காலத்தின் வெவ்வேறு விவரிப்புகள் உள்ளன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்கள், கண்ணுக்குத் தெரியாதவர்கள், மானம் என்ற பெயரில் நெருப்பில் தள்ளப்பட்ட பெண்களை மறக்க முடியாது. இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். பா.ஜ.க எம்.பியின் பேச்சால் வெட்கப்படுகிறேன்” என்றார்.