சென்னை: சென்னை வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருக்கு செல்வி (48) என்ற மனைவி, தேவேந்திரன் (22)என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் செல்போன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வந்துள்ளார்.
நிறுவன பணத்தில், தேவேந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் கடந்த வாரம் நிறுவனம்சார்பாக கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணத்தைகட்டுவதாக ஒப்புகொண்டு தவணை வாங்கியுள்ளார். அதன்படி நேற்று பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை. இதையடுத்து தேவேந்திரன் தலைமறைவானார்.
இந்நிலையில், நிறுவன பணியாளர்கள் பணம் கேட்டு தேவேந்திரன் வீட்டுக்கு நேற்று மதியம் வந்துள்ளனர். அவர் இல்லாதால், அவரது தாயை திட்டி, மிரட்டியதாக கூறுப்படுகிறது. இதனால், மன வேதனை அடைந்த செல்வி வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தனக்குதானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். கதவை உடைத்து செல்வியைமீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.