Loading

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (52). திரைப்பட உதவி இயக்குநராக உள்ளார். இவரது தங்கை அம்பிகா (51). கணவர் வேலுசாமி, இந்த தம்பதியின் மகன் கோகுலகண்ணன்.

இவர்கள், பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சிவக்குமார், அம்பிகாவின் தந்தையும், தாயும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதையடுத்து கோவை மற்றும் பல்லடத்தில் உள்ள பூர்வீக சொத்துகள் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டன.

விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த சிவக்குமாரிடம், பூர்வீக சொத்தை தங்களுக்கு எழுதித்தரும்படி அம்பிகா தகராறில் ஈடுபட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிவக்குமாரை, கடந்த 25-ம் தேதி அம்பிகா மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்றனர். பல்லடத்தில் அம்பிகாவுக்குச் சொந்தமான வீட்டில் அடைத்து வைத்து, கூலிப்படையினரை வைத்து தாக்கி சொத்து பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். நகை, பணத்தை அபகரித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள மனநல மருத்துவமனையில் சிவக்குமாரை சேர்த்துள்ளனர். மனநல காப்பகத்தில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி, அங்குள்ளவர்கள் மூலம் தனது உறவினர்களுக்கு சிவக்குமார் தகவல் தெரிவித்தார் உறவினர்கள், சிவக்குமாரை மீட்டு பல்லடத்துக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து சிவகுமார் தந்த புகாரின்பேரில் அம்பிகா, வேலுச்சாமி, கோகுலகண்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்தனர். இதில், வேலுச்சாமி (61), கோகுலகண்ணன் (25), கூலிப்படையை சேர்ந்த அஸ்ரப்அலி (30), ரியாஸ்கான் (29), சாகுல்அமீது (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அம்பிகாவை போலீஸார் தேடி வருகின்றனர். கோகுலகண்ணன், பல்லடம் நகர பாஜக விவசாய அணி செயலாளராக உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *